Paristamil Navigation Paristamil advert login

கருங்கடல் கடற்கரைகளை மீண்டும் திறக்கும் ரஷ்யா

 கருங்கடல் கடற்கரைகளை மீண்டும் திறக்கும் ரஷ்யா

28 பங்குனி 2026 சனி 13:32 | பார்வைகள் : 248


ரஷ்யா கருங்கடல் கடற்கரைகளை எண்ணெய் கசிவு சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க இலக்கு வைத்துள்ளது.

கடந்த 2024 டிசம்பரில் எண்ணெய் கசிவு தொடர்பாக, மத்திய அளவிலான அவசரநிலை தொடர்ந்து அமுலில் உள்ளது.

அதன் அருகிலுள்ள கெர்ச் நீரிணையில் ஏற்பட்ட ஒரு குளிர்காலப் புயலின்போது, இரண்டு எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்தன; இதன் விளைவாக Mazut எனப்படும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் கனரக எரிபொருள் எண்ணெய் கரைக்கு ஒதுங்கியது.

இதன் காரணமாக, கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ள சுற்றுலா நகரமான அனபாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கசிந்த எரிபொருளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவு கடற்கரைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீரில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாக துணை பிரதமர் விட்டலி சவேலியேவ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, கருங்கடலில் புதிய எண்ணெய் படலங்கள் ஏதும் தென்படவில்லை என செயற்கைக்கோள்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், இந்த கோடைகாலத்தில் கருங்கடலின் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கடற்கரைகளை மீண்டும் திறக்க ரஷ்ய அரசாங்கம் நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவேலியேவ், "அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி நடந்தால், சூன்-1ஆம் திகதிக்குள் எங்கள் குடிமக்களுக்காக கடற்கரைகளைத் திறந்துவிடுவோம்" என்று கூறியுள்ளார்.

அதேபோல் ரஷ்ய அரசு ஓர் அறிக்கையில், "புதிய எரிபொருள் கசிவுகள் எதுவும் கடற்கரைக்கு வருபவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கோடைகாலம் முழுவதும் மாசு அளவுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளது.