Paristamil Navigation Paristamil advert login

மெசஞ்சரில் மாற்றம் செய்த Facebook!

மெசஞ்சரில் மாற்றம் செய்த Facebook!

6 புரட்டாசி 2020 ஞாயிறு 14:04 | பார்வைகள் : 14226


உலக அளவில் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். ஆனால் இந்த நிறுவனத்தின் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நாடாளுமன்ற தொழில்நுட்பக் குழு விசாரணை செய்து வருகிறது. இந்தக் குழுவில் இந்திய ஃபேஸ்புக் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

 
“ஃபேஸ்புக் எப்போதும் திறந்த வெளியாகவும், ஒளிவு மறைவின்றியும், எந்த அரசியல் சார்பின்றியும் செயல்படுகிறது. ஃபேஸ்புக்கில் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பதிவிடுகின்றனர்” என்று தெரிவித்தனர். இந்தியாவில் இந்த நிலைமை என்றால் அமெரிக்காவில் எப்போதும் எதாவது ஒரு சர்ச்சையில் ஃபேஸ்புக் சிக்கும். கருப்பின இளைஞர் ஒருவர் போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்தில் ட்ரம்ப் பதிவிட்ட சர்ச்சை பதிவை ட்விட்டர் நீக்கியது. ஃபேஸ்புக் நீக்கவில்லை. இது பெரிய சர்ச்சையானது.
 
இந்நிலையில் அமெரிக்காவில் தேர்தல் வரவுள்ள நிலையில் ஃபேஸ்புக் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் வதந்திகள், பொய்ச்செய்திகள் அதிகம் பரவும் என்பதால் மெசஞ்சர் செயலியில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும் என்ற வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
 
தனி நபரோ குரூப்போ 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும். இந்த நடவடிக்கையை தன்னுடைய மற்றொரு நிறுவனமான வாட்ஸ் அப்பில் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் உலக அளவில் 70சதவீதம் பார்வேர்ட் மெசேஜ்கள்
குறைந்துவிட்டதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
 
கொரோனா, அமெரிக்க தேர்தல் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது