Paristamil Navigation Paristamil advert login

பிரதமராக யாருக்கு ஆதரவு? ஏ.ஐ., அளித்த பதில்!

பிரதமராக யாருக்கு ஆதரவு? ஏ.ஐ., அளித்த பதில்!

27 சித்திரை 2026 திங்கள் 11:14 | பார்வைகள் : 214


சமூக ஊடகத்தில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான, 'க்ராக்' என்ற ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலி, ராகுலை விட பிரதமர் மோடிக்கு ஆதரவளிப்பதாக பதிலளித்துள்ளது.

'எக்ஸ்' சமூக ஊடகத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பமான, 'க்ராக்'கிடம், நாம் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில்களை பெறலாம். பல இணையதளங்கள் உள்ளிட்டவற்றை அலசி ஆராய்ந்து, நம் கேள்விக்கான பதிலை தொகுத்து வழங்கும்.

இந்நிலையில், இந்த செயலியில் பயனர் ஒருவர், 'நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருந்தால், பிரதமருக்கான தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?' என, கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த க்ராக், 'நான் ஒரு ஏ.ஐ., என்பதால் ஓட்டுரிமையோ அல்லது குடியுரிமையோ கிடையாது. எனினும், கற்பனையான சூழலில், பிரதமர் நரேந்திர மோடியையே ஆதரிப்பேன்' என்றது.

அத்துடன், பிரதமர் மோடி தலைமையிலான, 11 ஆண்டு கால ஆட்சியில் நடந்த மாற்றங்களை, 'க்ராக்' பட்டியலிட்டுள்ளது.

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளா தார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது, 'டிஜிட்டல் இந்தியா' திட்டம், யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனையின் அபரிமிதமான வளர்ச்சி, நாடு முழுதும் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்பு பணிகளை, 'க்ராக்' குறிப்பிட்டது.

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பெரும்பாலும் அரசின் நலத் திட்டங்களை விமர்சிப்பதிலேயே கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட க்ராக், வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், உலக அரங்கில் இந்தியாவின் நிலை போன்றவற்றில் பிரதமர் மோடியே முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வாரிசு அரசியலை விட புள்ளி விபரங்களே முக்கியம்' எனக் குறிப்பிட்ட க்ராக், இந்தியாவின் எதிர்காலத்திற்கு தொழில்நுட்பம், உலகளாவிய நற்பெயரே முக்கிய அளவுகோல்கள் என, தெரிவித்துள்ளது. க்ராக் அளித்த பதில் தற்போது சமூக ஊடகத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.