Paristamil Navigation Paristamil advert login

பாஜ ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு மாதம் ரூ.3000; மேற்கு வங்கத்தில் அமித் ஷா உறுதி

பாஜ ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு மாதம் ரூ.3000; மேற்கு வங்கத்தில் அமித் ஷா உறுதி

27 சித்திரை 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 178


மே மாதத்திற்கு பின், மேற்கு வங்க மாநில பெண்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 3000 டெபாசிட் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு ஏப்.23ம் தேதி முடிந்து விட்டது. 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் ஏப். 29ம் தேதி நடக்கிறது. இதற்காக தீவிர ஓட்டு வேட்டையில் பாஜ, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் இறங்கி உள்ளன. பிரதமர் மோடியும் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நாடியாவில் உள்ள ரானாகாட் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது;

மேற்கு வங்கத்தில் மே 4ம் தேதி பாஜ தனது அரசை அமைக்கும். அதன் பின்னர், இங்குள்ள ஒவ்வொரு சகோதரியின் வங்கிக்கணக்கிலும், தாய்மார்களின் வங்கிக்கணக்கிலும் பாஜ அரசு மாதம் தோறும் ரூ.3000 வரவு வைக்கும்.

வேலையில்லா இளைஞர்கள் அனைவரின் வங்கிக்கணக்கிலும் மாதம்தோறும் ரூ.3000 அனுப்பி வைக்கப்படும். அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் பஸ் பயணத்திற்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. அவர்கள் இலவசமாக பயணிக்கலாம்.

மம்தா பானர்ஜியும், காங்கிரசும் ஆட்சியில் இருந்த காலத்தில் அவர்கள், பயங்கரவாதத்தை வளர்த்து வந்தனர். 2014ல் பிரதமர் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், உரியில் தாக்குதல் நடந்தது. அப்போது நாம் துல்லிய தாக்குதல் நடத்தினோம். புல்வாமாவில் தாக்குதல் நடந்தது. அப்போது நாம் வான்வழியாக தாக்குதல் நடத்தினோம்.

பாகிஸ்தானில் நுழைந்து, ஆப்பரேஷன் சிந்தூரை நடத்தி பயங்கரவாதிகளை ஒழித்தோம். பிரதமர் மோடி நாட்டை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவித்துள்ளார். இங்கு அமைய இருக்கும் மோடி அரசு, ஊடுருவல்காரர்கள் அனைவரையும் கண்டறிந்து, சட்டப்பூர்வமாக அவர்களை வெளியேற்றும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.