Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்பி கேவியட் மனு

அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்பி கேவியட் மனு

24 மாசி 2026 செவ்வாய் 06:40 | பார்வைகள் : 186


திமுக அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ள நிலையில், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன். இவர்களது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது, காகிதம் மற்றும் மின்னணு வடிவில், 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024 - -25ம் நிதியாண்டில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில், 150க்கும் மேற்பட்டோர், தலா, 25 லட்சம் முதல், 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து, பணி பெற்றதற்கான விபரங்கள், சோதனையின் போது அமலாக்கத் துறைக்கு கிடைத்தன. பணி நியமனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுங்கள் என, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் கடிதம் அனுப்பப்பட்டது. அமலாக்கத் துறையிடம், 232 பக்க ஆவணங்களுடன் கூடிய தகவல்களை பெற்ற மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை.அந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக டி.ஜி.பி., வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரும், லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யும்படி, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரையும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை,  விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு,'' தமிழக அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்'' என,   உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சர் பேரு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால்,  நான் எந்த தவறும் செய்யவில்லை என நேரு மீண்டும் தெரிவித்து இருந்தார். இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்நிலையில், நேருவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான அதிமுக எம்பி இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக நேரு வழக்கு தொடர்ந்தால், தனது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாதுஎனக்கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்