Paristamil Navigation Paristamil advert login

கவிஞனென்று சொல்லிடுவோம்!

கவிஞனென்று சொல்லிடுவோம்!

4 புரட்டாசி 2025 வியாழன் 06:15 | பார்வைகள் : 109


கற்புக்கும் எழுத்துக்கும்

விகற்பமில்லை இவன் நெறிகளில்!

 

உள்ளதை உரக்கச் சொல்லிடுவான்

உள்ளங் கொள்ளாததை

உறங்காமலே சொல்லிடுவான்..

 

நெற்றிக்கண்ணுடை ஈசனாயினும் – அவனை

இசைக்கவும் வல்லவனே

வசைக்கவும் வருந்தாதவனே!

வசைபாடுபவர்க் கண்டு வருத்தமில்லை

 

வசனங்களின் விசிறியவன்! – இன்னார்

வாரிசென்பதில் நாட்டமில்லை

வார்த்தைகள் வடித்த வடிவமவன்!

 

விருதுகளில் விருப்பமில்லை

விமர்சனங்களின் விரும்பியவன்!

 

தனிமை தூது அனுப்புகிறது

வான்தொடும் எண்ணங்களை!

 

முற்றுப்புள்ளி இல்லாத வார்த்தை

கவிஞனின் கற்பனை!

 

காணாத கானல் நீரின்

நிழற்படங்கள்

கவிஞனின் கவிதைகள்!

 

எழுதுகோல் தலைகுனியவே

எழுந்து நிற்கிறது எழுத்துகள்

எழுச்சிப் படையாக!

 

வரலாற்றை வழிநடத்துகிறது

இவன் கவிகள் பாதச்சுவடிகளாய்!

 

ஏக்கமுற்ற ஏழை வாசகர்களுக்கு

இலக்கிய விருந்து – கவிதை!

 

ஒப்பாரியும் நற்தாலாட்டே

கவிஞனின் ராகத்தில்!

 

இவன் மதி உணராதவர்களுக்கு

இவனொரு ஆச்சரியக்குறியே!

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்