பரிசை முற்றுகை இட்ட 44 நாடுகள்..!

7 ஆனி 2020 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 21534
1937 ம் ஆண்டு, அதாவது 83 ஆண்டுகளுக்கு முன்னர், பரிசின் ஈபிள் கோபுரம் மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகள் எங்கும் ஏராளமான மண்டபங்கள், கொட்டகைகள், வரவேற்பு வளையங்கள் போன்றவை திடீரென்று முளைத்தன.
ஏன்? எதற்காக? - வாருங்கள் பார்க்கலாம்.
44 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் திரண்டு வந்து பரிசை முற்றுகையிட்டனர். தங்கள் நாடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த அரிய கலைப்பொக்கிஷங்களை அவர்கள் தத்தமது மண்டபங்களில் காட்சிப்படுத்தி வைத்தனர்.
திரும்பும் திசை எங்கும் ஒரே கோலாகலம். சோடனைகள், அலங்காரங்கள். அது ஜேர்மன் ஏரியா, இது சுவிஸ் ஏரியா, மற்றது இத்தாலி ஏரியா என்று ஈபிள் கோபுரத்தைச் சுற்றி இருந்த பகுதிகளை மக்கள் பெயரிட்டு அழைத்தனர்.
ஆம் அது ஒரு சர்வதேச கன்காட்சி. Exposition Internationale des Arts et Techniques dans la Vie Moderne என்பது அதன் பெயர். அதாவது ‘நவீன வாழ்க்கையில் கலை மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கண்காட்சி’ என்பது அதன் தமிழ் வடிவம்.
1850 ம் ஆண்டுக்குப் பின்னர் உலகம் மிகவேகமாக முன்னேறி வந்ததை நாம் அறிவோம். புதிய புதிய கண்டுபிடிப்புக்கள், நவீன சாதனங்கள் என்று உலகின் போக்கு வேகமாக மாறிக்கொண்டு இருந்ததால், அது குறித்த கண்காட்சி ஒன்றை நடத்த அப்போதைய பிரெஞ்சு அரசு எடுத்த முடிவின் விளைவே இக்கண்காட்சி.
அந்த 44 நாடுகளும் போட்டி போட்டு மக்களைக் கவரும் பல பொருட்களைக் காட்சிப்படுத்தின. மூன்று கோடி மக்கள் திரண்டு வந்து கண்காட்சியைப் பார்த்தனர். 250 ஏக்கர் பரப்பளவிலான பகுதி இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
1937 மே 25 தொடக்கம் நவம்பர் 25 வரையான ஆறுமாத காலம் கண்காட்சி நடந்தது. மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பரிசை சுற்றி வந்தனர்.
ஆனால் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை இன்னமும் இரண்டு ஆண்டுகளில் ( 1939 ) இரண்டாம் உலக யுத்தம் வெடித்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் சின்னாபின்னப்படப் போகிறது என்று.


அது ஒருபுறம் இருக்க, இந்தக் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான திட்டம் பின்னர் கைவிடப்பட்டிருந்தது.
அது என்ன?
நாளை...!!!