பாடசாலை துன்புறுத்தல் 'Harcèlement scolaire' புதிய நடைமுறைகளை அறிவித்த கல்வி அமைச்சு.

27 புரட்டாசி 2023 புதன் 18:16 | பார்வைகள் : 9717
இன்று பிரான்ஸ் தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal பாடசாலை துன்புறுத்தல்களுக்கு 'Harcèlement scolaire' எதிரான புதிய நடவடிக்கைகள் குறித்து அறிவித்துள்ளார். "பாடசாலை துன்புறுத்தல் சம்பவங்கள் அண்மைக் காலமாக சுனாமி போல் அதிகரித்து வருகிறது, பல துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகவுள்ளது. என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கல்வி அமைச்சு எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி பாடசாலைகளில், வரும் ஜனவரி 2024 முதல் பாடத்திட்டத்தில் 'பச்சாதாப வகுப்புகள்' நடைமுறைப் படுத்தப்படும். அதாவது பிற மனிதர்களுடன் எப்படி பழகுவது, நண்பர்களுடன் எப்படி அன்பு காட்டுவது, மாணவர்களின் நன்னடத்தை எவ்வாறு இருக்கவேண்டும் போன்ற விபரங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகுப்புகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இதுவரை துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மற்றும் ஒரு கல்லூரிக்கு மாற்றுவதற்கு பதிலாக, துன்புறுத்தல் புரிகின்ற மாணவர்களை வலுக்கட்டாயமாக மற்றும் ஒரு கல்லூரிக்கு மாற்றுவது, முன்பு இருந்தது போன்று துன்புறுத்தல் புரிந்த மாணவனுக்கு சில மாதங்கள் மன்னிப்பு வழங்கியது போல் அல்லாமல் உடனடி நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.