கொசு இறந்தாலும் மனிதர்களை துன்புறுத்தும்! ஆய்வில் தகவல்

25 புரட்டாசி 2017 திங்கள் 13:31 | பார்வைகள் : 11955
இறந்த பூச்சிகளும் மனிதர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்று ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
கொசுக்கள் உயிருடன் இருக்கும் போது, மனிதர்களுக்கு ஏராளமான தொந்தரவுகளை அளிக்கின்றன.
அவை கடிப்பதன் மூலம் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அவை இறந்த பின் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றால், அதுவும் இயலாது.
அவற்றின் சிதறிய முடிகள், எச்சில், கழிவுகள் காற்றில் கலந்துவிடுகின்றன. பின்னர் அதனை சுவாசித்தல் மூலம் மனிதர்கள் உட்கொள்ள நேரிடுகிறது.
இதனால் ஆஸ்துமா, அலர்ஜி நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவ்வாறான மனிதர்கள் வாழும் வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2008 முதல் ஜூலை 2016 வரை, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயாளிகளிடம் ஏரோ அலர்ஜன்ஸ் ஆய்வு செய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 4,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பூச்சிகள் 39% அளவிற்கு ஏரோ அலர்ஜன்ஸ் ஆக விளங்குகின்றன.
இதையடுத்து தூசி பூச்சிகள் (12%), களை மகரந்தம் (12%), தூசி (11%), பூஞ்சை வித்திகள் (6%) மற்றும் மரம் மகரந்தம் (6%) அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக பூச்சிகளில் கரப்பான் பூச்சுகள்(49%), கொசுக்கள்(31%) என காற்றை ஆபத்தான வடிவமாக மாற்றுகின்றன.
ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் 2 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34% பேர் 20 வயது முதல் 29 வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.