Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள்

இலங்கையில் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள்

20 ஆடி 2026 திங்கள் 18:22 | பார்வைகள் : 290


இலங்கையில் பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது நீர் மட்டம் 44 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை மட்டுமே காணப்படுவதால், நீரைக் கவனமாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனர்த்த மற்றும் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் பெரும்போக விவசாயச் செய்கைகளுக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் திறந்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கமாகப் பெய்யும் மழை இம்முறை குறிப்பிட்ட பகுதிகளில் போதியளவு கிடைக்கவில்லை என்றும், சில பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி 10 மில்லிமீட்டர் முதல் 15 மில்லி மீட்டர் வரையிலான மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கப்பெற்றது.

எல் நினோ காலநிலை தாக்கம் காரணமாக வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு எதிர்பார்க்கப்படும் மழை கிடைக்காது போனால், நிலவும் நீர் இருப்பைச் சரியாக முகாமைத்துவம் செய்து விநியோகிப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.