Paristamil Navigation Paristamil advert login

உலகிற்கான சேவையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்; பிரதமர் மோடிக்கு ஸ்கைரூட் நிறுவனம் உறுதி

உலகிற்கான சேவையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்; பிரதமர் மோடிக்கு ஸ்கைரூட் நிறுவனம் உறுதி

21 ஆடி 2026 செவ்வாய் 08:37 | பார்வைகள் : 253


இந்தியாவிலிருந்து உலகிற்கான சேவையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம் என பிரதமர் மோடிக்கு ஸ்கை ரூட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

நாட்டின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான, 'விக்ரம் - 1' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம், தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டுகளை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் பெற்ற, உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி ஸ்கை ரூட் நிறுவனத்தை பாராட்டி பேசினார். அவர், 'இது இளைஞர்களின் காலம். 28 வயதான இளைஞர்கள் ஸ்கைரூட் நிறுவனம் இணைந்து ராக்கெட்டை செலுத்தி உள்ளனர். 'ஸ்கைரூட்' எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்தக் குழுவின் சராசரி வயது வெறும் 28 வயது மட்டுமே என்று என்னிடம் கூறப்பட்டது' என தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடரின் இன்றைய தொடக்க நிகழ்வில், பிரதமர் மோடி எங்கள் குழுவினரை பற்றி பேசியது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது.

எங்கள் குழுவினரின் சராசரி வயது வெறும் 28 வயது என்று அவர் குறிப்பிட்டது, லட்சியமும் வாய்ப்பும் இணையும்போது இளம் இந்தியப் பொறியாளர்களால் எத்தகைய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை உணர்த்தும் சான்றாக அமைந்தது. இந்தியாவிலிருந்து உலகிற்கான சேவையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். இவ்வாறு ஸ்கை ரூட் நிறுவனம் கூறியுள்ளது.