Paristamil Navigation Paristamil advert login

வட அத்திலாந்திக் கடற்பரப்பில் பயணிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து

வட அத்திலாந்திக் கடற்பரப்பில் பயணிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து

20 ஆடி 2026 திங்கள் 12:04 | பார்வைகள் : 344


தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்பரப்பில், 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுக்குச் சொந்தமான 'எம்.வி. பரிமா' (MV Barima) பயணிகள் படகு கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து வெனிசுவேலா எல்லைக்கு அண்மையிலுள்ள போர்ட் கைடூமா நோக்கி சனிக்கிழமை (18) பிற்பகல் புறப்பட்ட படகு, இரவு 11 மணியளவில் பொமரூன் ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகே கடலில் ஏற்பட்ட கடும் அலைகளால் நிலைதடுமாறி கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு 11.01 மணியளவில் அவசர சமிக்ஞை கிடைத்ததைத் தொடர்ந்து, ஹெலிகொப்டர்கள், கடற்படை மற்றும் தனியார் படகுகள் இணைந்து சுமார் 1,000 சதுர மைல் பரப்பளவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மீட்கப்பட்டவர்களில் 41 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் அடங்குவதாக கயானா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பயணிகள் பட்டியல் முழுமையாகப் பராமரிக்கப்படாததால், காணாமல் போனவர்களின் துல்லியமான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதில் சிரமம் நிலவுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், படகோட்டி மற்றும் சில பணியாளர்கள் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

1939 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 87 ஆண்டுகள் பழமையான எம்.வி. பரிமா படகு, 2024 ஆம் ஆண்டு பராமரிப்பு செய்யப்பட்டிருந்ததுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் முழுமையான பழுதுபார்ப்புக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.