Paristamil Navigation Paristamil advert login

பழநி கோவில் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு; அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!

பழநி கோவில் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு; அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!

20 ஆடி 2026 திங்கள் 09:05 | பார்வைகள் : 267


பழநி தண்டாயுதபாணி சுவாமி மடத்தின், 110 கோடி ரூபாய் நிலம் விவகாரத்தில், அறநிலையத் துறை பொறுப்பு இணை கமிஷனர் வெங்கடேஷ் விளக்கம் அளிக்க, ஹிந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:

ஹிந்து சமய அறநிலையத்துறை பொறுப்பு இணை கமிஷனர் வெங்கடேஷ், பேட்டியளித்தபோது, 'பழநி நிலம் விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு தொடர்பில்லை' என, முந்திக்கொண்டு பதிலளித்துள்ளார்.

★ அப்படி அவர் கூறியது யாரை காப்பாற்ற; சேகர்பாபுவுக்கு தொடர்பில்லை என்றால், பின்னணியில் இருக்கும் சார் யார்?
★ கடந்த மார்ச் 27ல், பழனிசாமி என்ற சார்பதிவாளர், பழநி கோவில் நிலத்தை, சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ய மறுத்து, திருப்பி அனுப்பிய விஷயம், இணை ஆணையருக்கு தெரியுமா?
★ கோர்ட் உத்தரவுப்படி, இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, கோவில் வசம் எடுக்கப்பட்ட சொத்தை, பாதுகாக்க தவறியதன் பின்னணி என்ன?
★ ஓய்வு பெற்ற பின்பும் கோவிலில் பணிபுரியும் தாசில்தார் மாரியப்பன், வி.ஏ.ஓ., சின்னசாமி ஆகியோருக்கு, சட்டவிரோதப் பதிவு முயற்சி பற்றி தெரியுமா.
★ கோவில் சட்டப்பிரிவு கண்காணிப்பாளர் சிவநேசன், என்ன நடவடிக்கை எடுத்தார்; சென்னை அறநிலையத்துறை அலுவலக சட்டப்பிரிவு அதிகாரி ராஜா, கண்டும் காணாமல் இருக்குமாறு அறிவுறுத்தினாரா.
★ சேகர்பாபுவுக்கு தொடர்பில்லை என கூறும் வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு தி.மு.க., முன்னாள் அமைச்சர் சக்கரபாணிக்கு தொடர்பில்லை என சொல்லாதது ஏன்.
★ தற்போதைய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் உறவினர்கள் தான், நிலத்தை வாங்கியதாக அவதுாறு பரவியபோது, அதை மறுத்து, தெளிவுப்படுத்தாதது ஏன்?.

வழக்கு விசாரணை நடக்கும்போதே, விசுவாசத்தோடு, இணை கமிஷனர் வெங்கடேஷ் பேசுவது, பலத்த சந்தேகங்களை எழுப்புவதால், அவர் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.