Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் மக்கள் - தங்கம் அடகு வைப்பு அதிகரிப்பு

இலங்கையில் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் மக்கள் - தங்கம் அடகு வைப்பு அதிகரிப்பு

19 ஆடி 2026 ஞாயிறு 17:56 | பார்வைகள் : 333


இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்படும் கடன்களின் அளவு சுமார் 35,145 கோடி ரூபாயினால் அதிகரித்துள்ளதாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். இது சதவீத அடிப்படையில் சுமார் 54 சதவீத அதிகரிப்பாகும்.

வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு 66,000 கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் கடன் தொகை 1,01,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டில் நிலவும் பொருளாதார பணவீக்கம் மற்றும் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய கட்டாயம், மக்கள் தங்க நகைகளை அடகு வைப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைந்ததாகப் பேராசிரியர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியின் உச்சகட்டத்தின்போது, தங்க அடகு வைப்புத் தொகை 35,600 கோடி ரூபாய் வரை அதிகரித்திருந்தது. மேலும், உலக சந்தை மற்றும் ரூபாயின் மதிப்பு மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளமையும் மக்கள் தங்கள் நகைகளை விற்பனை செய்யத் தூண்டியுள்ளது.

தங்க நகைகளை அடகு வைத்தல் அல்லது விற்பனை செய்தல் காரணமாக, நாட்டில் உள்ள வீடுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை தற்போது தங்க நகைகள் இல்லாத வீடுகளாக மாறியுள்ளதாக நிதி நிறுவனங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொருளாதார பணவீக்கம் காரணமாக பல்வேறு தரப்பினர் தங்களுக்குச் சொந்தமான சுமார் 10 இலட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.