Paristamil Navigation Paristamil advert login

உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடி; நிர்மலா சீதாராமன் பெருமிதம்

உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடி; நிர்மலா சீதாராமன் பெருமிதம்

19 ஆடி 2026 ஞாயிறு 06:38 | பார்வைகள் : 283


அணுக்கரு திட்டங்களில், உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடியும் பெருமையுடன் பறக்கிறது, என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார்.

மதுரையில், சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் அமைப்பு நடத்திய தேசிய நிதி தொழில்முனைவோர் மாநாட்டில், சி.ஐ.ஐ., டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி வரவேற்றார். தென்மண்டல தலைவர் ரவிச்சந்திரன், யங் இந்தியன்ஸ் தேசிய தலைவர் அருண் ரத்தோட், துணைத் தலைவர் அனுஜ் அகர்வால் கலந்து கொண்டனர்.

இதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:உக்ரைன் போர், இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் போர்களால் சரக்கு கப்பல்கள் சரியான நேரத்தில் வந்து சேரவில்லை. எண்ணெய், எரிவாயு சிக்கல்களால் உரங்களின் விலை உயர்ந்துள்ளது. இது போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.

பிரான்ஸ் நாட்டு தொழில்முனைவோர் கூட, இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுடன் இணைய விரும்புகின்றனர். எனவே, இளைஞர்கள் தங்கள் தயக்கங்களை உடைத்து தொழில்முனைவோராக முன்வர வேண்டும்.

பிரான்சில் நடைபெறும் சர்வதேச ஐ.டி.இ.ஆர்., அணுக்கரு இணைவு ஆராய்ச்சி திட்டத்தில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. 'எல் அண்டு டி' நிறுவன இந்திய பொறியாளர்கள், அதிநவீன எதிர்கால தொழில்நுட்பத்திற்கான மாபெரும் அணுக்கரு கருவிகளை உருவாக்கி வழங்கி வருகின்றனர். அணுக்கரு திட்டங்களில், உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடியும் பெருமையுடன் பறக்கிறது.

இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் உள்ள நிலையில், அவை சிறப்பாக செயல்படுகின்றன. விருதுநகரில் சிட்பி வங்கி ஒரு பிரிவை தொடங்கி, விருதுநகர் மிளகாய் வற்றல் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.