Paristamil Navigation Paristamil advert login

உகாண்டாவில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்து! 20 மாணவர்கள் பலி!

உகாண்டாவில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்து! 20 மாணவர்கள் பலி!

18 ஆடி 2026 சனி 18:08 | பார்வைகள் : 244


கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலாவிற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்சோவா (Kapchorwa) மாவட்டத்தின் செக்வாடிட் (Chekwatit) கிராமத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (16)  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  உகாண்டா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

'கிங் டேவிட் ஜூனியர்' பாடசாலைக்குச் சொந்தமான இந்த பஸ், சிபி நீர்வீழ்ச்சிக்கான (Sipi Falls) பயணத்தை முடித்துவிட்டு தலைநகர் கம்பாலா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உகாண்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி பெரிய கல் ஒன்றில் மோதி கவிழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 28க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த சிறுவர்களின் பெயர்கள் அல்லது வயது விபரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. இந்த விபத்தில் முதியவர் ஒருவரும் அந்தப் பாடசாலையின் நிறுவனர் மற்றும் அதிபரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்நாட்டு அனைத்து பாடசாலை சுற்றுலாக்களும் பயணங்களும்  தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.