Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசுடன் சேர வேண்டாம்; தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

காங்கிரசுடன் சேர வேண்டாம்; தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

18 ஆடி 2026 சனி 12:51 | பார்வைகள் : 134


பார்லிமென்டில் எந்த விவகாரத்திலும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டாம்; பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை விமர்சிக்க வேண்டாம்' என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி, தி.மு.க., - எம்.பி.,க்களுடன், லண்டனில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று முன்தினம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அவர், “மேகதாது அணை விவகாரம், காவிரி நதி நீர் உரிமைக்காக குரலெழுப்ப வேண்டும். பார்லிமென்டில் எந்த விவகாரத்திலும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டாம். மாநில உரிமை சார்ந்த விவகாரங்களில் தனித்து களம் காண வேண்டும். மாநில கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கேற்கலாம். காங்கிரஸ் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை விமர்சிக்க வேண்டாம்,” என கூறியுள்ளார்.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டது. அக்கட்சியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பார்லிமென்டில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை, தி.மு.க., எதிர்க்க வேண்டும் என, காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார்.

தி.மு.க., என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை, காங்கிரஸ் சொல்லி தர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எடுக்கிற முடிவை பற்றி, காங்கிரஸ் ஏன் கவலைப்பட வேண்டும். பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு பின், தேசிய அளவில் அணிகள் மாறும். தி.மு.க.,வின் நிலைப்பாடு அப்போது தெரியவரும்.

தி.மு.க.,வை சேர்ந்த இரண்டு எம்.பி.,க்கள், மத்திய அமைச்சராகலாம் என, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது, அவரது தனிப்பட்ட கருத்து. பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைக்கும் என, திருமாவளவன் சொல்லியிருப்பதும் அவருடைய கருத்து.

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க அவசரம் இல்லை. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. எனவே, மாநில நலனுக்காக, மாநில கட்சிகளுடன் இணைந்து, பார்லிமென்டில் தி.மு.க., குரல் கொடுக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.