Paristamil Navigation Paristamil advert login

நவோதயா பள்ளிகளை திறக்க முன்வர வேண்டும்; தமிழக அரசுக்கு பா.ஜ., கோரிக்கை

நவோதயா பள்ளிகளை திறக்க முன்வர வேண்டும்; தமிழக அரசுக்கு பா.ஜ., கோரிக்கை

18 ஆடி 2026 சனி 11:45 | பார்வைகள் : 133


தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க, த.வெ.க., அரசு முன்வர வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு, தரமான, இலவசக் கல்வி வழங்கும், நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் தொடங்க, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, முந்தைய தி.மு.க., அரசின் பிடிவாதப்போக்கை தொடராமல், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க, முன்வர வேண்டும்.

மும்மொழிக் கொள்கை என்பது, ஹிந்தி திணிப்பு அல்ல; மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான எந்தவொரு மூன்றாவது மொழியையும், தேர்வு செய்யலாம்' என, உச்ச நீதிமன்றமே தெளிவாக விளக்கியுள்ளது. இதை ஏற்று, பழைய வெற்று அரசியல் காரணங்களை தவிர்த்து, மாணவர்களின் கல்வி நலனை பிரதான நோக்கமாக கொண்டு, த.வெ.க., அரசு செயல்பட வேண்டும்.

த.வெ.க., அரசு, தன் நிலைப்பாட்டை, மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களையும், உடனடியாக கண்டறிய வேண்டும். ஏழை மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை முன்னிறுத்தி, இந்த பள்ளிகளை தொடங்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.