Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் தொடரில் புதிய அணி? முதலமைச்சர் திட்டம்

ஐபிஎல் தொடரில் புதிய அணி? முதலமைச்சர் திட்டம்

23 வைகாசி 2026 சனி 15:20 | பார்வைகள் : 192


2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது.

முதலில் 8 அணிகள் இருந்த நிலையில், 2022 ஐபிஎல் தொடர் முதல், கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு தற்போது 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கென தனி ஐபிஎல் அணி உருவாக்க வேண்டும் என வேதாந்தா குழும தலைவரும் பிரபல தொழிலதிபருமான அனில் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளைப் போல, பீகாரும் தனக்கென ஒரு அணியைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பீகாரின் மண், நாட்டிற்கு பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை வழங்கியுள்ளது.

பாட்னாவில் பிறந்த இஷான் கிஷன், எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் அதிவேக ஒருநாள் இரட்டைச் சதம் அடித்தார். சமஸ்திபூரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் ஆனார். மேலும் இன்று, கோபால்கஞ்சில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சாகிப் ஹுசைனின் அற்புதமான பந்துவீச்சின் மீது உலகமே தன் பார்வையைச் செலுத்துகிறது.

ஆனால் ஒரு விஷயம் என்னை எப்போதும் உறுத்துகிறது: நமது பீகார், கிரிக்கெட்டில் நமக்கு உரிமையான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் ஏன் இன்னும் பெறவில்லை?

பீகாரின் இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க முழு வாய்ப்புகளைப் பெறுவதையும், நமது வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் ஆதரவையும் இங்கேயே பீகாரில் பெறுவதையும் உறுதி செய்வதே எனது கனவாகவும் முயற்சியாகவும் இருந்து வருகிறது.

நமது குழந்தைகளுக்கு சரியான உத்வேகமும் வசதிகளும் கிடைத்தால், நமது பீகாரில் இருந்து உருவாகும் அணி உலகின் சிறந்த அணியாக மாறும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இந்த முயற்சியில் நான் பீகார் இளைஞர்களுடன் உறுதியாக நிற்கிறேன். பீகார் கிரிக்கெட் அணியையும் அதன் வீரர்களையும் இங்கு முன்னேற்றுவதற்கு என் தரப்பிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவேன்.

என்னைப் பொறுத்தவரை, பீகார் என்பது வெறும் மாநிலம் மட்டுமல்ல அது ஒரு உணர்வு. நமது மண்ணின் திறமை களத்தில் ஜொலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.

அனில் அகர்வாலின் கருத்துக்கு பதிலளித்துள்ள பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, "நான் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். பீகாரின் கிரிக்கெட் 'உணர்ச்சிக்காக', அரசு ஒரு தெளிவான 'பார்வையுடன்' ஒரு 'செயல்திட்ட' முறையில் செயல்பட்டு வருகிறது.

உங்கள் ஒத்துழைப்புடன், பீகார் கிரிக்கெட் அணி தொடர்பாக நிச்சயமாக ஒரு சாதகமான முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த அனில் அகர்வால், "எனது முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. பீகாரின் அனைத்து விளையாட்டுத் திறமையாளர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தெரிவித்த ஐபிஎல் சேர்மன் அருண் துமால், அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. 10 அணிகள் என்பதே நன்றாக உள்ளது. எனினும், இது குறித்து அப்போதைக்கு முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.