Paristamil Navigation Paristamil advert login

விராட் கோலிக்கு இருந்த உளவியல் நோய் - உதவிய டிராவிட்

விராட் கோலிக்கு இருந்த உளவியல் நோய் - உதவிய டிராவிட்

22 வைகாசி 2026 வெள்ளி 12:49 | பார்வைகள் : 190


தனக்கு இருந்த உளவியல் பாதிப்பில் இருந்து மீள ராகுல் டிராவிட் உதவியது குறித்து விராட் கோலி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்த விராட் கோலி, சர்வதேச T20 மற்றும் டெஸ்ட் வடிவத்தில் ஓய்வை அறிவித்து விட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

மேலும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலிக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது வரை ஆரோக்கியமான உடல்நலத்துடன் விராட் கோலி விளையாடி வந்தாலும் தனக்கிருந்த மனநல பாதிப்பு குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்தியாவில் உள்ள வீரர்களை மேம்படுத்தும் நோக்கில், 'ஆர்சிபி இன்னோவேஷன் லேப்' என்ற திட்டத்தை RCB அணி தொடங்கியுள்ளது.

பெங்களூருவில் நடந்த இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய விராட் கோலி, "வீரர்களாகிய நீங்கள், எச்சரிக்கையாக இருப்பதற்கும் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் இடையில் எப்போதும் ஒரு மெல்லிய கோட்டில் பயணிக்கிறீர்கள்.

நீங்கள் ஒருபோதும் போதுமான திறமைசாலி இல்லை என்று தொடர்ந்து உணர்கிறீர்கள், அந்த தகுதியற்றவர் என்ற எண்ணம் எப்போதும் இருக்கிறது.

இன்றும் நான் வலைப்பயிற்சிக்குச் செல்லும்போது, ​​'இந்த இளம் வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று நினைப்பேன். நான் சரியாகப் பயிற்சி செய்யவில்லை என்றால், 'இவர்தானா 20 வருடங்களாக விளையாடி வரும் வீரர்?' என்று அவர்கள் ஒருவேளை யோசிப்பார்கள். அந்த எண்ணம் எப்போதும் இருக்கும்.

அதில் இருந்து மீண்டு வர ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோர் எனக்கு உதவினார்கள். ராகுல் பாய் அதை புரிந்துகொண்டார், ஏனென்றால் அவரே மிக உயர்ந்த மட்டத்தில் அதை அனுபவித்திருந்தார். விக்ரமும் பல ஆண்டுகளாக அணியில் இருந்தார்.

நான் என்ன உணர்கிறேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டு, மனதளவில் என்னை உண்மையாகவே கவனித்துக்கொண்டார்கள். அது, நான் மீண்டும் எனது கிரிக்கெட்டை ரசித்து விளையாடக்கூடிய ஒரு நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது" என பேசியுள்ளார்.

சாதனையாளர்கள் பலருக்கும் இந்த 'இம்போஸ்டர் சிண்ட்ரோம்' என்ற உளவியல் பாதிப்பு இருந்துள்ளது.

அவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றிருந்தும் கூட, தங்கள் சொந்தத் திறமையை நம்பாமல், அந்த வெற்றிக்கு அதிர்ஷ்டம் அல்லது வேறு சில காரணங்கள் இருப்பதாக நம்பியுள்ளனர்.

மேலும், வாழ்வில் எதுவுமே பெரிதாக சாதிக்கவில்லை, இதுவரை சாதித்ததற்கு அதிர்ஷடமோ அல்லது பிறரது உதவிகளோ தான் காரணம் என நினைப்பார்கள். என்றாவது ஒருநாள் இது மற்றவர்களுக்கு தெரிந்துவிடும், என்னை மோசடிக்காரன் என எண்ணி விடுவார்கள் என்ற பயத்தில் இருப்பார்கள்.

இதனை அந்த நபர்களே சரிசெய்து விடலாம் தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையை நாடலாம். ஆனால், இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் சுய-சந்தேக உணர்வுகள், பதற்றம் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கும் வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் 'ரிஸ்க்' எடுக்கக்கூடிய தைரியத்தை அது குலைத்துவிடும் என கூறப்படுகிறது.