கல்கி -2 படத்தில் சாய் பல்லவி நடிக்கிறாரா ?
16 ஆனி 2026 செவ்வாய் 16:55 | பார்வைகள் : 160
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைகதை மற்றும் புராண அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை தீபிகா படுகோனே இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் திரையுலக வட்டாரங்களிலும் செய்திகள் பரவி வந்தன.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் நாக் அஷ்வின், இந்த தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், “சுமதி என்ற கதாபாத்திரம் இந்த திரைப்படத்தின் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். தீபிகா படுகோனேவுக்குப் பதிலாக சாய் பல்லவி நடிக்கிறார் என்ற தகவல் வெறும் யூகம்தான். கல்கியின் தாயாக சுமதி கதாபாத்திரம் அமைந்துள்ளதால், அந்த கதாபாத்திரத்தை எளிதாக மாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் தீபிகா படுகோனே சுமதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நடிகை ஆலியா பட் இந்த திரைப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இடம்பெறும் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சாய் பல்லவி உண்மையிலேயே ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைகிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan