Paristamil Navigation Paristamil advert login

2030க்குள் பிஎஸ் 7 அமல்படுத்த திட்டம்; கால நீட்டிப்பு கேட்கும் வாகன துறை

2030க்குள் பிஎஸ் 7 அமல்படுத்த திட்டம்; கால நீட்டிப்பு கேட்கும் வாகன துறை

11 ஆனி 2026 வியாழன் 08:12 | பார்வைகள் : 185


வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகைகளை கட்டுப்படுத்த, 'பி.எஸ்., 7' என்ற பாரத் ஸ்டேஜ் 7 உமிழ்வு விதிமுறைகளுக்கான வரைவை நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு, வெளியிட இருப்பதாகவும், 2030க்குள் அது அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

2020 முதல் 'பி.எஸ்., 6' உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, அதன் பின், 10 ஆண்டுகளில் 'பி.எஸ்., 7' விதிமுறைகளை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது, நடப்பாண்டில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அமலுக்கு வரவுள்ள 'யூரோ 7' விதிமுறைகளுக்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, வெளியேறும் வாகன நச்சு புகைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள், நவீன வாகன நச்சு புகை கண்காணிப்பு அமைப்பு, மேம்படுத்தப்பட்ட உமிழ்வு கட்டுப்பாடு அமைப்புகள் ஆகியவற்றை உற்பத்தி நிறுவனங்கள் வாகனங்களில் பயன்படுத்த வேண்டும்.

இந்த வரைவு, நடப்பு நிதியாண்டிற்குள் முன்மொழியப்பட்டு, தொழில்நுட்பங்களை மேம்படுத்த வாகன துறைக்கு மூன்று ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால், வாகன துறையினர் சிலர், 2031ம் நிதியாண்டு வரை அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இ.வி., விற்பனை உயரும்

பி.எஸ்., 7 விதிமுறைக்கு மாற, வாகன இன்ஜின், மாசு கட்டுப்பாட்டு அமைப்பு, சோதனை மற்றும் சரிபார்ப்பு உட்கட்டமைப்பு, உதிரிபாகங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை வாகன நிறுவனங்கள் மேம்படுத்த அதிக முதலீடு தேவைப்படும். பி.எஸ்., 7 அமலானால், ஹைபிரிட், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட மாற்று எரிபொருள் பசுமை வாகனங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.