Paristamil Navigation Paristamil advert login

வடக்கு அயர்லாந்தில் கத்திக்குத்து - சூடான் நாட்டவர் கைது!

வடக்கு அயர்லாந்தில் கத்திக்குத்து - சூடான் நாட்டவர் கைது!

10 ஆனி 2026 புதன் 15:25 | பார்வைகள் : 133


வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் நபர் ஒருவருக்கு கழுத்து மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள 30 வயதுடைய சூடான் நாட்டுப் பிரஜை மீது கொலை முயற்சி, பொது இடத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்தமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் புதன்கிழமை (10) பெல்ஃபாஸ்ட் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த கத்திக்குத்து தாக்குதலுக்காக செவ்வாய்க்கிழமை (9) அங்கு நூற்றுக்கணக்கான எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சில வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படாத இந்த கத்திக்குத்து சம்பவம், பிரித்தானியாவில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் பின்னணியில் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டும் வடக்கு அயர்லாந்தில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு ஒன்றை அடுத்து குடியேற்றவாசிகளுக்கு எதிரான கலவரங்கள் வெடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நகரின் பல்வேறு பகுதிகளில் முகமூடி அணிந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் கவச வாகனங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தினர்.

போராட்டக்காரர்கள் கிழக்கு பெல்ஃபாஸ்டில் பேருந்து ஒன்று உட்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். கிழக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள வீதி ஒன்றில் 100 பேர் கொண்ட கும்பல் வீடுகளின் கதவுகளை உடைத்து, ஜன்னல்களை உடைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு அயர்லாந்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த தாக்குதலை "கொடூரமானது" என கூட்டாகக் கண்டித்துள்ளதுடன், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அந்தந்த சமூகங்களையே பாதிக்கும் என்பதால் அனைவரும் அமைதி காக்குமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.