Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் ‘சதை தின்னும் புழுக்கள்’

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் ‘சதை தின்னும் புழுக்கள்’

7 ஆனி 2026 ஞாயிறு 10:55 | பார்வைகள் : 218


அமெரிக்காவின் டெக்சாஸ்  மாநிலத்தில் கால்நடைகளுக்கு மத்தியில் ‘சதை தின்னும் புழுக்கள் என அழைக்கப்படும் ஒட்டுண்ணிப் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் கால்நடைகளுக்குக் கனடா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

கனடா உணவு ஆய்வு முகமையின் அறிவிப்பின்படி, எல்லை கடப்பதற்கு முந்தைய 21 நாட்களுக்குள் டெக்சாஸ் மாநிலத்தில் இருந்த பசுக்கள் மற்றும் குதிரைகள் எதுவும் கனடாவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தி மாநிலமான டெக்சாஸில், இரண்டாவது கன்றுக்குட்டியிலும் இந்த ஒட்டுண்ணித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் திணைக்களம்  அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கால்நடைத் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த "மிக நெருக்கடியான அச்சுறுத்தல்" காரணமாக டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட் , அங்கு உத்தியோகபூர்வமாகப் பேரழிவு அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், "இந்தத் தொற்று கோடைகாலம் முழுவதும் மேலும் பரவக்கூடும்"என எச்சரித்துள்ளார்.

மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள லா பிரையர் மற்றும் சவாலா ஆகிய பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுடைய இரு கன்றுகுட்டிகளின் தொப்புள் கொடிப் பகுதிகளில் இந்த புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளில் இந்த ஒட்டுண்ணிப் பாதிப்பு கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தற்போது தொற்று கண்டறியப்பட்ட இடத்தைச் சுற்றி 20 கிலோமீட்டர் பரப்பளவிலான கட்டுப்பாட்டு வலயம் உருவாக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.