Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் நகர சபையின் புதிய திட்டம்: 17,000 மாணவர்களுக்கு இலவச உணவு!!

பரிஸ் நகர சபையின் புதிய திட்டம்: 17,000 மாணவர்களுக்கு இலவச உணவு!!

7 ஆனி 2026 ஞாயிறு 07:27 | பார்வைகள் : 296


பரிஸ் நகரின் புதிய மேயராக பதவியேற்றுள்ள Emmanuel Grégoire, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 17,000 மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலை உணவக சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கான தீர்மானம் ஜூன் மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள பரிஸ் நகர சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான மற்றும் தரமான உணவு கிடைக்கச் செய்வதே தமது நோக்கம் என மேயர் தெரிவித்துள்ளார். தற்போது மிகவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஒரு உணவிற்கு 13 முதல் 85 சென்ட் வரை கட்டணம் செலுத்தி வருகின்றனர். புதிய திட்டத்தின் கீழ் அவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படவுள்ளது. மற்ற குடும்பங்களுக்கான கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் நகரின் பாடசாலை உணவகங்களில் தினமும் சுமார் 100,000 மாணவர்கள் உணவருந்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்காக நகராட்சி ஆண்டுக்கு சுமார் 1.2 மில்லியன் யூரோக்கள் செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2027 ஆம் ஆண்டுக்குள் பாடசாலை உணவகங்களில் வழங்கப்படும் அனைத்து உணவுகளும் உயிரியல், பிரான்சின் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பொருட்களால் தயாரிக்கப்படும் இலக்குடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.