Paristamil Navigation Paristamil advert login

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் AI - வெளியான எச்சரிக்கை

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் AI - வெளியான எச்சரிக்கை

5 ஆனி 2026 வெள்ளி 17:57 | பார்வைகள் : 196


சக்திவாய்ந்த AI அமைப்புகளை உருவாக்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என Anthropic AI நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இது எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த சூழலில் செயற்கை நுண்ணறிவு முன்னோடி ஆய்வகமான ஆந்த்ரோபிக் ஏஐ (Anthropic AI), தனது சமீபத்திய வலைப்பதிவில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.  

அந்நிறுவனத்தின் வலைப்பதிவில், "போதுமான அளவு முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, போதுமான கணக்கீட்டுத் திறன் வழங்கப்பட்டால், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் போக்கு, தனது சொந்த வாரிசை முழுமையாக, தன்னாட்சியாக வடிவமைத்து உருவாக்கும் திறன்கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பையே சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர் சுய-மேம்பாடு என்று அழைக்கப்படுகிறது. நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை; மேலும் தொடர் சுய-மேம்பாடு என்பது தவிர்க்க முடியாததும் அல்ல. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் தயாராக இருப்பதை விட அது விரைவில் வரக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

மீள்சுழற்சி சுய முன்னேற்றம் என்பது, ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு, தனக்கு அடுத்த பதிப்பை முழுமையாக தன்னிச்சையாக வடிவமைத்து உருவாக்கும் திறன் கொண்டதாகும்.

இந்நிகழ்வு எதிர்பார்த்ததை விட மிக விரைவில் நடக்கக்கூடும் என்று தங்கள் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு மக்கள் பணிபுரியும் விதத்தை மாற்றுவது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கப்படும் விதத்தையும் மாற்றத் தொடங்கியுள்ளது என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

"செயற்கை நுண்ணறிவு தன்னைத்தானே உருவாக்கும்போது: தொடர் சுய-மேம்பாட்டை நோக்கிய நமது முன்னேற்றமும் அதன் தாக்கங்களும்" என்ற தலைப்பில் அந்நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.