Paristamil Navigation Paristamil advert login

விபத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க்

விபத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க்

5 ஆனி 2026 வெள்ளி 14:15 | பார்வைகள் : 212


அவுஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விபத்தில் சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்த மைக்கேல் கிளார்க், 2026 ஐபிஎல் தொடரில் வர்ணனனையாளராக பணியாற்றினார்.

இறுதிப்போட்டி முடிந்த பின்னர் அவர் அவுஸ்திரேலியா செல்வதற்கு, விமான நிலையத்திற்கு புறப்பட்ட போது அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.

சிறிய காயங்களுடன் தப்பி, அவுஸ்திரேலியா சென்ற கிளார்க் இது குறித்து பாட்காஸ்ட் ஒன்றில் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய கிளார்க், "முதலில், இந்தியாவில் உள்ள நல்ல மனிதர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதனால்தான் நான் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்.

போட்டி முடிந்த பிறகு, பயணம் செய்துகொண்டிருந்தபோது தூங்கிவிட்டேன். பிறகு நான் கண்விழித்தபோது, ​​காரின் முன்பகுதி கிட்டத்தட்ட ஒரு லாரியின் அடியில் இருந்ததைக் கண்டேன்.

லாரியில் இருந்த பிரேக் விளக்குகள் வேலை செய்யவில்லை என்று ஓட்டுநர் என்னிடம் விளக்கினார். அதனால், என் ஓட்டுநர் அந்த லாரியின் பின்பக்கத்தில் மோதியுள்ளார். எனக்குச் சில சிராய்ப்புகள் ஏற்பட்டன, ஆனால் ஓட்டுநருடைய காலில் ஒரு சிறிய முறிவு ஏற்பட்டிருப்பதாக நம்புகிறேன்.

கார் சேதமடைந்திருந்தது. அது அவருடைய கார் அல்ல, அவர் அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் மிகுந்த பயத்துடன் இருந்தார்.

பிசிசிஐயில் உள்ள அனைவரும், அங்கிருந்த அனைவரும், ஓட்டுநரைப் பற்றியும் என்னைப் பற்றியும் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு அக்கறை காட்டினார்கள். அதனால் அதற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இது போன்ற விஷயங்கள் எல்லா நேரங்களிலும் நடக்கின்றன, ஆனால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான் அதிகம். ஏனென்றால் நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன் கண்விழித்தபோது, ​​ஒரு லாரிக்கு அடியில் கார் சிக்கும் தருவாயில் இருந்ததைக் கண்டேன்.

வீடு திரும்புவதற்கு இது சிறந்த வழி இல்லை என்றாலும், விமானத்தைப் பிடித்து மீண்டும் இங்கு வந்துவிட்டேன், மேலும் அற்புதமான ஐபிஎல் தொடரில் ஒரு அங்கமாக இருந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.