Paristamil Navigation Paristamil advert login

அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு

அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு

5 ஆனி 2026 வெள்ளி 07:37 | பார்வைகள் : 153


தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக, தன் அதிகாரப்பூர்வ முடிவை, இன்று மதியம் 12:00 மணிக்கு அறிவிக்க உள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை, கடந்த 2025 ஏப்ரலில்  நீக்கப்பட்டார். தனக்கு, மத்திய அமைச்சர் அல்லது கட்சியில் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி தரப்படாததால், அண்ணாமலை அதிருப்தியில் இருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த, இரு ஆண்டுகளிலேயே, விஜய் ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார்.

அதை பின்பற்றி தமிழக அரசியலில், புதிய பாதையில் பயணிக்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இது குறித்த விபரத்தை, பா.ஜ., தலைமைக்கு தெரிவித்து, கட்சியிலிருந்து விலகுவதற்காக, கடந்த 1ம் தேதி,  டில்லி சென்றார். அப்போது  இரு நாட்களில் முடிவை தெரிவிக்கிறேன் என, அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த நாள், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய அமைப்பு பொது செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, கட்சியில் இருந்து விலகும் முடிவை தெரிவித்ததாக, தகவல் வெளியானது. பின், பிரதமர் மோடியை சந்தித்து விட்டு, தன் பிறந்த நாளான நேற்று தன் முடிவை அண்ணாமலை தெரிவிக்க இருந்தார்.

ஆனால், நேற்று முன்தினம் மோடியை, சந்திக்கவில்லை; நேற்று மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், இன்று மதியம் தன் முடிவை அறிவிப்பதாக அண்ணாமலை, அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், இன்று மதியம், 12:00 மணி அளவில், சமூக வலைதளங்கள் வாயிலாக, உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என, தெரிவித்துள்ளார்.