Paristamil Navigation Paristamil advert login

5,200 எத்தனால் வினியோக நிலையம்; நாடு முழுவதும் அமைக்கிறது அரசு

5,200 எத்தனால் வினியோக நிலையம்; நாடு முழுவதும் அமைக்கிறது அரசு

5 ஆனி 2026 வெள்ளி 07:22 | பார்வைகள் : 202


நாடு முழுவதும் முதற்கட்டமாக, 5,200 எத்தனால் வினியோக நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த வகை பெட்ரோல், 'இ - 20' என்ற பெயரில் விற்பனையாகிறது. இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோலுடன் அதிகளவில் எத்தனாலைக் கலந்து பயன்படுத்தும் தொழில்நுட்பம், 'பிளெக்ஸ் பியூயல்' எனப்படுகிறது. முன்பு இதற்காக எத்தனால் நிலையங்களை அமைக்க முயன்றபோது, அதற்கு ஏற்ற வாகனங்கள் சந்தையில் தயாராக இல்லை. தற்போது, 85 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை எத்தனாலில் இயங்கக் கூடிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சந்தைக்கு வர உள்ளன.

எனவே நாடு முழுவதும் 5,200 எத்தனால் நிலையங்கள் அமைக்க உள்ளோம். முதற்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 500 எத்தனால் நிலையங்கள் அமைக்கப்படும். வரவேற்பை பொறுத்து படிப்படியாக இதை விரிவுபடுத்துவோம். விற்பனையாகும் வாகனங்களில் 50 சதவீதம், 'பிளெக்ஸ் பியூயல்' ஆக மாறினால், எத்தனால் தேவை 400 கோடி லிட்டராக உயரும். இது விவசாயிகளுக்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கும் பக்கபலமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.