Paristamil Navigation Paristamil advert login

ஒட்டுமொத்த நாட்டிற்கே பெருமையான தருணம்; பிரதமர் மோடி

ஒட்டுமொத்த நாட்டிற்கே பெருமையான தருணம்; பிரதமர் மோடி

5 ஆனி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 219


ஒட்டுமொத்த நாட்டிற்கே பெருமையான தருணம் என்று உலக யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைத்த பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலக யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது; இன்று ஆமதாபாத் மண்ணிலிருந்து, சர்வதேச விளையாட்டு பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்படுகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உலக பாரம்பரிய நகரமான ஆமதாபாத்தில் இன்று, முதலாவது உலக யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. இந்தியாவிற்கு வருகை தந்துள்ள தடகள வீரர்களை நான் வரவேற்கிறேன்.

இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு பெருமையான தருணமாகும். ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் பல நாடுகளில் யோகா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இது கோல்கத்தாவிலும் கொண்டாடப்படும். அதற்கு முன்னதாக, இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது விளையாட்டு மற்றும் நல்வாழ்வுக்கு சிறந்த பரிசாக அமைந்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் 'யோகா 365' என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. அனைத்து  வீரர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, இந்த யோகா சொல்லும் கருத்துக்களையும் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த நாடுகளில் 'யோகா 365' இன் தூதுவர்களாக மாற முடியும்.

இப்போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் சரி, நீங்கள் அனைவரும் ஏற்கனவே தங்களை சாம்பியன்களாக நிரூபித்துவிட்டீர்கள். உங்களது திறமையும், உங்களது ஒழுக்கமும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும், இவ்வாறு அவர் கூறினார்.