Paristamil Navigation Paristamil advert login

விஜய் பாணியில் அரசியல் செய்ய உதயநிதி திட்டம்

விஜய் பாணியில் அரசியல் செய்ய உதயநிதி திட்டம்

4 ஆனி 2026 வியாழன் 13:10 | பார்வைகள் : 191


த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய் போலவே, வார இறுதியில் ஒரு மீட்டிங், இரண்டு அறிக்கை என, அரசியல் செய்ய, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

முதல்வர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபோது, வார இறுதியில் சனிக்கிழமைகளில், சுற்றுப்பயணம் செய்தார். ஆளும் கட்சிக்கு எதிராக எப்போதாவது தான் அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்றது. அதே பாணியில் அரசியல் செய்ய உதயநிதியும் ஆசைப்படுகிறார்.

அதன்படி, வாரம் ஒருநாள் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும், வாரத்துக்கு இரண்டு அறிக்கை மட்டுமே விடவும் உதயநிதி திட்டமிட்டுள்ளார். அதனால் தான், திருச்சி கூட்டத்தில், தி.மு.க.,வை முதல்வர் விஜய், கடுமையாக சாடியதற்கு, உதயநிதி பதில் அளிக்காமல், முன்னாள் எம்.எல்.ஏ., எழிலன், ராஜா எம்.பி., ஆகியோரை வைத்து, தி.மு.க., பதிலளித்தது.

இப்படி, இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து பதிலளித்தால், மக்களிடம் சேராது. எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் உதயநிதி, பம்பரமாய் சுழன்று, அரசியல் செய்ய வேண்டும். ஆனால், முதல்வர் விஜய் மேற்கொண்ட அரசியலை, உதயநிதியும் செய்ய ஆசைப்படுவது, கட்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

விஜய் கட்சியினர் இளைஞர்கள். ஆனால், தி.மு.க.,வில் இருப்பவர்கள், நீண்ட அரசியல் அனுபவசாலிகள். எனவே, இளைஞர்களை கவர, சில திட்டங்களை செய்யலாம். ஆனால், மொத்த திட்டமுமே இளைஞர்களை நோக்கி இருந்தால், கட்சியை பலவீனப்படுத்தி விடும்.

எனவே, ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உதயநிதி முன்வர வேண்டும். ஆளும் கட்சிக்கு எதிராக, தினசரி அரசியலில் செயல்பட்டால்தான், தோல்வியில் இருந்து தி.மு.க., மீளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.