Paristamil Navigation Paristamil advert login

இரத்தத்தால் சிவப்பான கடல்... பாரம்பரிய வேட்டையில் ஃபேரோ தீவுவாசிகள்

இரத்தத்தால் சிவப்பான கடல்... பாரம்பரிய வேட்டையில் ஃபேரோ தீவுவாசிகள்

3 ஆனி 2026 புதன் 15:20 | பார்வைகள் : 130


வருடாந்திர பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, ஃபேரோ தீவுகளில் நூற்றுக்கணக்கான பைலட் திமிங்கிலங்களை அங்குள்ள மக்கள் கொன்று குவித்துள்ளனர்.

சிறு குழந்தைகள் உட்படப் பெருங்கூட்டம் ஒன்று இதனை வேடிக்கை பார்க்க, வட அட்லாண்டிக் தீவுக்கூட்டத்தின் கடற்கரை, விலங்குகளின் இரத்தத்தால் செந்நிறமாக மாறியது.

பைலட் திமிங்கலங்களையும் டால்பின்களையும் படகுகளைக் கொண்டு சுற்றி வளைத்து ஆழமற்ற நீருக்குள் விரட்டி பின்னர் கூரான ஆயுதங்களால் கொன்று குவிப்பது பாரம்பரியமாக ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்பிறகு, உள்ளூர் மக்கள் 1,000 ஆண்டுகள் பழமையான ஃபாரோஸ் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அவற்றின் இறைச்சியையும் கொழுப்பையும் உண்கின்றனர்.

ஆனால் ஒவ்வொரு கோடை காலத்திலும் முன்னெடுக்கப்படும் இந்த கோரமான சடங்கை காட்டுமிராண்டித்தனமானது என்று கருதும் விலங்குரிமைப் பாதுகாவலர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

டென்மார்க்கின் ஒரு தன்னாட்சிப் பிரதேசமான ஃபாரோஸ் அரசு, கிரின்டட்ராப் என்பது அப்பகுதியின் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதி என்றும், அந்த நிகழ்வு சமூகத்திற்கு இலவச உணவை வழங்குகிறது என்றும் வாதிடுகிறது.

கொல்லப்படும் விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வமான தரவுகள் ஏதும் இல்லாவிட்டாலும், ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் கொல்லப்படுவதாக முந்தைய புள்ளிவிவரங்கள் மதிப்பிட்டுள்ளன.

கடந்த ஆண்டு 814 நீள் துடுப்பு பைலட் திமிங்கலங்களும், வெண் பக்க டால்பின்களும் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இயற்கை வாழ்விடங்களில், பெண் நீண்ட துடுப்புப் பைலட் திமிங்கிலங்கள் 60 ஆண்டுகள் வரையிலும், ஆண் திமிங்கிலங்கள் 45 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியவை.

திமிங்கிலங்கள், டால்பின்கள் மற்றும் போர்பாய்ஸ்கள் போன்ற அனைத்து கடல் பாலூட்டிகளைப் போலவே, நீண்ட துடுப்புடைய பைலட் திமிங்கிலங்களும் கடல் சூழல் மண்டலங்களில் மிக முக்கியப் பங்காற்றி, கடல்கள் உயிர்ப்புடன் மற்றும் செழித்து விளங்க உதவுகின்றன.

இனப்பெருக்கமும் இணைதலும் பொதுவாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நடைபெறுகின்றன; மேலும், ஒவ்வொரு மூன்று முதல் ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு கன்று பிறக்கிறது. வயதான மற்றும் இனப்பெருக்கம் செய்யாத பெண் விலங்குகள், கூட்டத்தில் உள்ள கன்றுகளைப் பராமரிக்க உதவுகின்றன.