Paristamil Navigation Paristamil advert login

லூவர் அருங்காட்சியக நகை கொள்ளை வழக்கு: நான்கு சந்தேக நபர்கள் மீது இவ்வாரம் விசாரணை!!

லூவர் அருங்காட்சியக நகை கொள்ளை வழக்கு:  நான்கு சந்தேக நபர்கள் மீது இவ்வாரம் விசாரணை!!

3 ஆனி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 348


புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த அரச கிரீட நகைகள் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களும் இவ்வாரம் விசாரணை நீதிபதியால் தனித்தனியாக விசாரிக்கப்பட உள்ளனர். ஏழு மாதங்களாக நீடித்து வரும் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விசாரணை வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் டிஎன்ஏ ஆதாரங்களின் மூலம் மூன்று முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் ரஷீத் என்ற நபர் கொள்ளைச் சம்பவத்தின் திட்டமிடலில் முக்கிய பங்கு வகித்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இன்னும் மீட்கப்படாத நிலையில், அவை வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது Aubervilliers பகுதியில் மறைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

விசாரணையின் போது சந்தேகநபர்களின் வாக்குமூலங்களில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு உண்மையை வெளிக்கொணர நீதிபதி முயற்சிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொள்ளைத் திட்டத்தில் யார் தலைமை வகித்தனர், நகைகள் தற்போது எங்கு உள்ளன என்பதையே விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கருப்புச் சந்தையில் விற்பனை செய்வது மிகவும் கடினமானது என குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழமையான மற்றும் உயர்மதிப்புடைய இந்நகைகளை மறைத்து வைத்திருப்பதே தற்போது குற்றவாளிகளுக்கு பெரிய சுமையாக மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.