Paristamil Navigation Paristamil advert login

பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை

பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை

2 ஆனி 2026 செவ்வாய் 13:16 | பார்வைகள் : 169


பாஜவில் இருந்து அண்ணாமலை விலகினார்; அவர் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார்.

பாஜவில் தனக்கு பதவி எதுவும் வழங்கப்படாததால், அதிருப்தியில் உள்ள அண்ணாமலை, தனியாக கட்சி தொடங்க உள்ளதாக, தகவல் பரவியது. இந்தசூழ்நிலையில், அவரை பா.ஜ., டில்லி மேலிடம் அழைத்தது. எனவே, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்காக, நேற்று சென்னையிலிருந்து விமானத்தில், டில்லி புறப்பட்டு சென்றார்.

டில்லியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் அண்ணாமலை தங்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜூன் 02) பாஜ தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார். அப்போது பாஜவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார்.

யார் இந்த அண்ணாமலை

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள தொட்டம்பட்டியில் 1984ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி அண்ணாமலை பிறந்தார்.  2011ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று, கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றினார்.

2020ல் பாஜகவில் இணைந்த அவர், 2021ல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியடைந்தார்.

2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் இன்று பாஜவில் இருந்து விலகினார்.