Paristamil Navigation Paristamil advert login

இந்தியர்களின் அமெரிக்க கனவு கசந்தது; வெளியேற துடிக்கும் 40 சதவீதம் பேர்

இந்தியர்களின் அமெரிக்க கனவு கசந்தது; வெளியேற துடிக்கும் 40 சதவீதம் பேர்

24 சித்திரை 2026 வெள்ளி 05:08 | பார்வைகள் : 232


ஒரு காலத்தில் இந்தியர்களின் கனவு நாடாக கருதப்பட்ட அமெரிக்காவில் இருந்து வெளியேற, 40 சதவீதம் பேர் விரும்புவதாக ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் படிப்பதற்காகவோ, வேலை தேடியோ செல்ல வேண்டும் என்பது இந்தியர்கள் மட்டுமல்லாது பல நாடுகளில் உள்ள இளைஞர்களுக்கும் லட்சியமாகவே இருந்தது.

அமெரிக்காவில் தற்போது, 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் 1.6 சதவீதம் ஆகும். ஆனால் அமெரிக்கா தற்போது அதன் மதிப்பை இழந்து மக்கள் வெறுக்கும் நாடாக மாறி வருகிறது.

கார்னகி எண்டோவ்மென்ட் என்ற நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு அறிக்கை இதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அந்த அறிக்கையின்படி, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில், 40 சதவீதம் பேர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.

அதிலும் 14 சதவீதம் பேர் அமெரிக்காவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதாகவும், 26 சதவீதம் பேர் வெளியேறும் எண்ணம் எப்போதாவது தங்களுக்கு வருவதாகவும் கூறியுள்ளனர்.

அமெரிக்காவை விட்டு வெளியேற நினைப்பதற்கு இந்தியர்கள் முக்கிய காரணமாக மூன்று விஷயங்களை குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் குறிப்பாக, அதிபர் டொனால்டு டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போக்கு தங்களுக்கு சங்கடத்தை அளிப்பதாக, 71 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களால் நிதி நெருக்கடி ஏற்படுவதாக, 54 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பாதுகாப்பு அச்சம் காரணம் என, 41 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.