Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் முற்றுகையை மீறி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

அமெரிக்காவின் முற்றுகையை மீறி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

23 சித்திரை 2026 வியாழன் 14:53 | பார்வைகள் : 186


ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை இப்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரான் மீதான கடல்சார் முற்றுகை உத்தி 'மிகப்பெரிய வெற்றி' அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஈரானுடன் "இறுதி ஒப்பந்தம்" எட்டப்படும் வரை இந்தத் தடைகள் நீக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இந்த முற்றுகையை மீறி ஈரானுடன் தொடர்புடைய சுமார் 34 கப்பல்கள் தடையின்றிப் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்றுகையை மீறிச் சென்ற 34 கப்பல்களில் 19 கப்பல்கள் ஈரானுடன் தொடர்புடையவை. இவை வளைகுடாவிலிருந்து வெளியேறிவிட்டன.

ஏனைய 15 கப்பல்களும் அரபிக் கடலிலிருந்து வளைகுடாவுக்குள் நுழைந்து ஈரானை நோக்கிச் சென்றுள்ளன.

வெளியேறிய கப்பல்களில் குறைந்தது 6 கப்பல்கள் ஈரானிய மசகு எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த 6 கப்பல்களிலும் மொத்தமாக சுமார் 10.7 மில்லியன் பீப்பாய்களில் எண்ணெய் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பொதுவாக ப்ரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலையை விட, சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானிய எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 10 டொலர் குறைவாக விற்கப்படுகிறது.

இந்த அடிப்படையில், தடையை மீறிச் சென்ற இந்த எண்ணெய் மூலமாக ஈரானுக்கு சுமார் 910 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.