Paristamil Navigation Paristamil advert login

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்

23 சித்திரை 2026 வியாழன் 04:00 | பார்வைகள் : 188


தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 23) 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை வாக்காளர்கள், 14.5 லட்சம் பேர்.

மாநிலம் முழுவதும், 33,133 இடங்களில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1.06 லட்சம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில், 234 தொகுதிகளில், 4,023 வேட்பாளர்கள் உள்ளனர்.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 6 மணி வரை மக்கள் ஓட்டளிக்கலாம்.

தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க., - வி.சி.க., உள்ளிட்ட, 22 கட்சிகளுடன் இணைந்து, தி.மு.க., மெகா கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட 12 கட்சிகளை இணைத்து, அ.தி.மு.க.,வும் பலமான கூட்டணியை அமைத்துள்ளது.

களத்தில் விஐபிக்கள்

முதல்வர் வேட்பாளர்களான, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சேலம் எடப்பாடி தொகுதியிலும், புதிய வரவான த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், காரைக்குடி தொகுதியிலும் களத்தில் உள்ளனர். விஐபி தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.