Paristamil Navigation Paristamil advert login

மம்தா செயல் ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடியது: சுப்ரீ்ம கோர்ட்

மம்தா செயல் ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடியது: சுப்ரீ்ம கோர்ட்

23 சித்திரை 2026 வியாழன் 11:37 | பார்வைகள் : 169


திரிணமுல் காங்கிரசின் தேர்தல் வியூக நிறுவனமான ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய  சோதனையை முதல்வர் மம்தா பானர்ஜி தடுத்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. 'ஒரு முதல்வர் செய்த இந்த செயல், ஒட்டு மொத்த ஜனநாயகத்தையே ஆபத்தில் ஆழ்த்தக்கூடியது' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 8 ம் தேதி கொல்கட்டாவில் உள்ள ஐபேக் அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று சோதனையைத் தடுத்ததாகவும், சில கோப்புகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை  கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில்   மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.இந்தவழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது மம்தா  பானர்ஜி, அரசு அதிகாரிகள் மற்றும் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கூறியதாவது:

இது அசாதாரணமான சூழ்நிலை. மேற்கு வங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட  விவகாரத்தை மற்ற நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருவதை பார்த்துள்ளோம். யதார்த்தங்களை நாம் சாதாரணமாக கடந்து செல்ல இயலாது.

நீங்கள் நன்மையான சட்டக்கோட்பாடுகளை முன் வைத்து வாதிடலாம். ஆனால், மாநிலத்தில்  நிலவும் நடைமுறைச் சூழலை நாம் ஒரு போதும் புறக்கணித்து விட முடியாது.

இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான பிரச்னை  இல்லை.  மத்திய அமைப்பு இருக்கும் அலுவலகத்திற்குள் ஒரு மாநில முதல்வர்   நேரில் செல்லும் ஒரு நாள் வரும் என்று நாங்கள் ஒரு போதும் நினைத்தது இல்லை. எந்தவொரு மாநில முதல்வரும், ஒரு விசாரணை நடக்கும் நேரத்தில் குறுக்கிட்டு, ஜனநாயகத்தை ஆபத்திற்கு உள்ளாக்கிவிட்டு, பிறகு, இதனை மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதலாக மாற்ற வேண்டாம் என  கூற முடியாது.  இது ஒட்டு மொத்த ஜனநாயகத்தையே ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய  ஒரு செயலாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.