Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் பற்றி கார்கே விமர்சனம்: பாஜ கடும் கண்டனம்

பிரதமர் பற்றி கார்கே விமர்சனம்: பாஜ கடும் கண்டனம்

22 சித்திரை 2026 புதன் 12:34 | பார்வைகள் : 184


சென்னையில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடியை  கடுமையாக விமர்சித்தார்.  அவருக்கு,   பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், அண்ணாமலை  உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் கார்கே நிருபர்களிடம் கூறியதாவது: இந்த மண்  அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் மண். ஈவெரா, அம்பேத்கர், அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி ஆகியோர், பெண்கள் ஒதுக்கீடு, நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காக உறுதியாக நின்றார்கள். இதற்காக பணியாற்றினார்கள்.

ஆனால், அதிமுக பெயரில் அண்ணாதுரை உள்ளது. அவரது படத்துடன் எப்படி மோடி புகைப்படத்தை இணைக்கலாம். அவருக்கு,  சமத்துவம் மீது நம்பிக்கையில்லை. இவ்வாறு கார்கே கூறினார்.  அப்போது  மோடியை பற்றி குறிப்பிட கார்கே கடுமையான வார்த்தையை பயன்படுத்தினார்.

மோடி குறித்து கார்கே குறிப்பிட்ட வார்த்தை குறித்து நிருபர்கள் விளக்கம் கேட்டனர்அதற்கு கார்கே,  பிரதமர் மோடி, மக்களையும் அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தி வருகிறார்.  மக்களை  மோடி அச்சறுத்துகிறார் என்று சொன்னேன்.  அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் அவரது கைகளில் உள்ளன.  தொகுதி மறுசீரமைப்பையும் அவரது கைகளில் வைத்துள்ளார் என விளக்கமளித்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் கூறியதாவது:  விவகாரம் இல்லாததையும் பாஜ விவகாரம் ஆக்க முயற்சி செய்கிறது.  அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் பிரதமர் மோடி  மிரட்டி வருகிறார். இதனை தான் கார்கே  கூறினார் எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை விமர்சித்த கார்கேவுக்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்

சோனியா குடும்பத்தினர், கார்கே மற்றும காங்கிரஸ் கட்சியினர்  எப்போதும் இத்தகைய தரம் தாழ்ந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கை கார்கேவின் உள்ளமும் மனமும் இன்று ஏற்றுக்காள்ளாமல் தவிக்கின்றன. சோனியா குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோல்வியை சந்தித்து  இருப்பதை  அவர்களால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் ஊழல் சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர்கள் போல அன்றி, பிரதமர் மோடி  25 ஆண்டுகளாக குஜராத் அரசையும், தற்போது 12 ஆண்டுகளாக  மத்திய அரசையும் நற்பெயருடன் வழிநடத்திவருகிறார். இவர்கள் ஜனநாயகத்தை நசுக்கி உள்ளனர். இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளிலும் நாட்டிற்கு எதிராக பேசி வருகின்றனர். அவர்களின் இத்தகைய மனப்போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். சோனியா குடும்பத்தினர் கடைபிடித்துவரும் மோடி எதிர்ப்பு அணுகுமுறையையும்  வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:  

தனக்கு என தனித்துவமான பாரம்பரியத்தை கொண்ட காங்கிரஸ் கட்சியின்  தலைவர், மிகவும்  இழிவான சொல்லை பயன்பத்தி பிரதமர் பதவிக்கு களங்கம் வகையில் செயல்பட்டு,  பிரதமர் மோடியை நேரடியாகவே கடுமையான வார்த்தையை  பயன்படுத்தி விமர்சித்து உள்ளார்.

இதற்காக கார்கே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.  மக்களிடமும்  மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் இண்டி கூட்டணி தோல்வி அடையப்போகிறது என்பதை கார்கே  களநிலவரம் மூலம் தெரிந்து கொண்டுள்ளார். அதனால் விரக்தியின் உச்சியில் இழிவான சொல்லை பேசி வருகிறார்.இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள்  விரைவில் ஓய்வு பெறுவது சிறந்தது. அவ்வகையில் கார்கேயும் ஓய்வு பெறுவது சிறந்ததாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.