அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் திட்டத்தில் மஹிந்த
20 சித்திரை 2026 திங்கள் 16:24 | பார்வைகள் : 183
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழப்போவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இம்முறை மே தினம் போயா தினத்தில் வருவதால், தமது கட்சி மே தினக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஆன்மீக மற்றும் மதக் காரியங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சித்திரை புத்தாண்டின் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தின் பணிகள் இன்று திங்கட்கிழமை (20) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சிச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனக்குப் புத்தாண்டு வெற்றிகரமாக அமைந்திருந்தாலும், நாட்டின் மக்கள் இம்முறை புத்தாண்டை முறையாகக் கொண்டாடுவதற்கு வசதி வாய்ப்புகள் இருக்கவில்லை எனக் கவலை வெளியிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ,
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, பொதுமக்களிடையே புத்தாண்டு தொடர்பான உற்சாகமோ அல்லது உண்மையான புத்தாண்டு உணர்வோ காணப்படவில்லை.
மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இம்முறை புத்தாண்டை எதிர்கொண்டனர்.
இம்முறை மே தினம் பௌத்தர்களின் புனித நாளான வைகாசி பெளர்ணமி (வெசக் போயா) தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.
மே தினத்திற்குப் பதிலாக அன்றைய தினம் சமய வழிபாடுகள் மற்றும் 'பிங்கம் எனப்படும் பௌத்த புண்ணிய காரியங்கள்' உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து மே தினத்தைக் கொண்டாடப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து வினவியபோது, தமது கட்சி அவர்களுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், அன்றைய தினம் தாம் 'சில் எனப்படும் உபவாசம்' உள்ளிட்ட சமயக் கிரியைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய ஆண்டில் அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவித்தார். அத்துடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தை தமது கட்சி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் அரசியல் சவால்கள் மற்றும் மாற்றங்களுக்குத் தமது கட்சி முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan