Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்புக்கு துபாய் ஹைடெக் நிறுவனம்; பல லட்சங்களை வாரியிறைக்கும் விஜய்

பாதுகாப்புக்கு துபாய் ஹைடெக் நிறுவனம்; பல லட்சங்களை வாரியிறைக்கும் விஜய்

18 சித்திரை 2026 சனி 11:40 | பார்வைகள் : 203


த.வெ.க., தலைவர் விஜய், தேர்தல் பிரசாரத்தை அடிக்கடி ரத்து செய்வதன் பின்னணியில், துபாய் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆலோசனைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் நயீம் மூஸா. இவர் துபாயில், 'ஜென்ட்டுர் செக்யூரிட்டி சர்வீசஸ்' என்ற பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். துபாய், கத்தார், குவைத், இந்தியா, ஓமன், மலேஷியா, பஹ்ரைன், சவுதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்நிறுவனம், 200 வகையான பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் இதன் தலைமை அலுவலகம், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டுகளை சேர்ந்த பிரபல நடிகர்கள், பிரபல தொழிலதிபர்கள், வி.வி.ஐ.பி.,க்களுக்கு, இந்நிறுவனம் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் நிர்வாக இயக்குநரான நயீம் மூஸா, தற்போது த.வெ.க., தலைவர் விஜயுடன் இருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்டோர், இவரின் அனுமதியை பெற்றே விஜயை சந்திக்க முடியும்.

கேரள சட்டசபை தேர்தலில், நயீம் மூஸா ஓட்டு போடுவதற்கு வசதியாக, தனது ஒருநாள் பிரசாரத்தையே விஜய் ரத்து செய்யும் அளவிற்கு, அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

விஜயின் தேர்தல் பிரசாரத்தை இந்நிறுவனம் எப்படி கண்காணிக்கிறது என த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

முன்பு, ஜென்ட்டுர் செக்யூரிட்டி நிறுவன பாதுகாவலர்கள் ஐந்து பேர் மட்டுமே விஜயுடன் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கரூர் சம்பவத்திற்கு பின், விஜய் பிரசார பயணத் திட்டத்தை கண்காணிக்க, கூடுதலாக 100 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

விஜய் உடன் வாகனத்தில் கருப்பு உடை அணிந்து இருக்கும் மூன்று பேரை தவிர, இந்த 100 பேர் யார் என்று யாருக்கும் தெரியாது. மக்களுடன் மக்களாக கலந்து, விஜயின் பாதுகாப்பை இவர்கள் உறுதி செய்கின்றனர்.

இவர்களிடம் உள்ள விலை உயர்ந்த மொபைல்போன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் வாயிலாக, உடனுக்குடன் கூட்ட நெரிசலைக் கண்காணித்து, பிரசாரத்தை தொடரலாம் அல்லது ரத்து செய்யலாம் என முடிவு செய்கின்றனர். இதன் வாயிலாக தான் சமீபத்தில், விஜயின் சில பிரசாரங்கள் ரத்தாகி அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

விஜய் பிரசாரம் ரத்தாகும் விபரம், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்கு, பின்னர் தான் தெரியவரும். அந்த அளவிற்கு இதில் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின், இதற்கென மாதந்தோறும் பல லட்சம் ரூபாயை விஜய் செலவிட்டு வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர். 

எழுத்துரு விளம்பரங்கள்