Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் - 16 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் - 16 பேர் பலி

16 சித்திரை 2026 வியாழன் 15:45 | பார்வைகள் : 188


உக்ரைன் மீது ரஷ்யா பல மணிநேரங்களுக்கு நீடித்த தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 16 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைன் விமானப்படை வெளியிட்ட தகவலின்படி, 636 “ஷாகித்” வகை டிரோன்கள் உள்ளிட்ட மொத்தம் 703 ரொக்கெட்டுகள் மற்றும் ஆளில்லா வான்வழி டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் 667 தாக்குதல்கள் வழிமறித்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 26 இடங்களில் தாக்குதல்கள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 20 டிரோன்கள் மற்றும் 12 ரொக்கெட்டுகள் தாக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. பகலிலிருந்து இரவு வரை நீடித்த இந்த தாக்குதல், போரின் தீவிரத்தைக் காட்டுவதாக உள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கான உக்ரைன் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து,  ரஷ்யா சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்ற பெயரில் தாக்குதலை ஆரம்பித்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

போரின் தொடக்கம் முதல் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில், ஐக்கிய நாடுகளின் தகவலின்படி, 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelenskyy ), “ரஷியாவுக்கு எதிரான தடை நடவடிக்கைகளை தளர்த்துவது அல்லது உலகளாவிய கொள்கைகளை மாற்றுவது பொருத்தமற்றது என்பதை இந்த தாக்குதல் மீண்டும் நிரூபிக்கிறது,” என தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்