Paristamil Navigation Paristamil advert login

மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்த தீவிரம் !

மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்த தீவிரம் !

15 சித்திரை 2026 புதன் 09:37 | பார்வைகள் : 143


பார்லியில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல் செய்வதற்காக, லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

லோக்சபா மற்றும் சட்டசபைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு வழங்க 2023 செப்டம்பர் மாதம் மத்திய பாஜ அரசு சட்டம் இயற்றியது. இதனை வரும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதனை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்கு வசதியாக தற்போது லோக்சபா எம்பிக்களின் மொத்த எண்ணிக்கையான 543 ல் இருந்து 850 ஆக உயர்த்துவது எனவும், இதற்காக அரசியல் சட்டத்தின் 81 வது பிரிவை திருத்துவது எனவும்  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 16 முதல் 18 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில்,  சட்டத் திருத்தத்தின் வரைவு மசோதா எம்பிக்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.இதன்படி,  எம்பிக்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கும் நிலையில், அதில்  815 தொகுதிகள் மாநிலங்களிலும், 35 தொகுதிகள்  யூனியன் பிரதேசங்களிலும் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.  இந்த மாற்றங்கள் வரும் 2029ம் ஆண்டில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் எதிர்க்கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதில்,  திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கூறுகையில் இந்த சட்டதிருத்தம் பார்லிமென்டில் 3 ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்