Paristamil Navigation Paristamil advert login

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதத் தாக்குதல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதத் தாக்குதல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் பலி

27 சித்திரை 2026 திங்கள் 12:59 | பார்வைகள் : 116


மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஜிஹாதி அமைப்புகள் மற்றும் பிரிவினைவாதிகள் ஒருங்கிணைந்து நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதல்களில், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாடியோ காமாரா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் பமாக்கோவிற்கு அருகிலுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்றின் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது அமைச்சர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகவும், இதன்போது ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், அருகிலிருந்த மசூதியில் இருந்த சிலரும் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ ஆட்சியின் தலைவரான ஜெனரல் அசிமி கோயிட்டாவின் இல்லமும் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாலி இராணுவத்திற்கு ஆதரவாகப் போரிட்டு வந்த ரஷ்யாவின் தனியார் கூலிப்படையினர் (முன்னர் வாக்னர் குழு), வடக்கு நகரான கிடால் பகுதியிலிருந்து வெளியேற உடன்பட்டுள்ளனர். 'அசாவாத் விடுதலை முன்னணி' என்ற துவாரெக் பிரிவினைவாத அமைப்புடன் ஏற்பட்ட கடும் மோதலைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

"கிடல் நகரம் தற்போது சுதந்திரமாக உள்ளது" எனப் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த இந்த நகரம், 2023-இல் ரஷ்யப் படைகளின் உதவியுடன் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவோ மற்றும் திம்புக்டு நகரங்களைக் கைப்பற்றுவதே தமது அடுத்த இலக்கு என அசாவாத் விடுதலை முன்னணி'அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளில் மாலியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த பயங்கரவாதத் தாக்குதல் இதுவென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அல்-கொய்தா மற்றும் ஐஎஸ் (IS) அமைப்புகளுடன் தொடர்புடைய குழுக்கள் இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவை இந்த வன்முறையைக் கடும் சொற்களால் கண்டித்துள்ளன.

மாலி நாடு முழுவதும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.