Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

27 சித்திரை 2026 திங்கள் 11:53 | பார்வைகள் : 182


அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு அருகில்  ஞாயிற்றுக்கிழமை 26.04.2026 அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் இரண்டு பெண்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணமாக இருக்கலாம் என அந்நாட்டுப் பொலிஸார் கூறுகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் வருடாந்த கொண்டாட்டமான லிட்டில் 500 சைக்கிளோட்டப் போட்டி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வேளையில், பெருந்திரளான போட்டியாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பொதுமக்களும் சூழ்ந்திருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது நேரடித் துப்பாக்கிச் சூட்டில் 5 பெண்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும் ஏனைய சுமார் 4 பேர் தப்பி ஓடும்போது காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

நிகழ்வு நடைபெற்றபோது அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதிகாலை 12.25 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக புளுமிங்டன் பாதுகாப்புத்துறையின் தலைமை அதிகாரி Michael Diekhoff செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் நடந்த இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் சென்று பார்த்தபோது, அங்கு துப்பாக்கிச் சூட்டினாலும் துப்பாக்கிக் குண்டுகளின் சிதறல்களாலும் தாக்கப்பட்டு 5 பெண்கள் காயமடைந்து கிடந்ததைக் கண்டுள்ளனர். அத்துடன் தம்மை காப்பாற்றிக்கொள்ள ஓடியபோது சிலர் காயமடைந்ததாகவும் தலைமை அதிகாரி  குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கிர்க்வுட் அவனியூ பகுதியில் (Kirkwood Avenue) உள்ள ஃபைவ் கைஸ் (five guys) உணவகத்தின் முன்பாக இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுக் காரணமாக இருந்திருக்கலாம் என்று  Michael Diekhoff தெரிவித்துள்ளார்.

அப்போது நடந்த மோதலின்போது பலர் கைத்துப்பாக்கிகளை வெளியே எடுத்ததை பொலிஸார் கண்டதாகவும் அவர்களில் இருவர் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தன்னிடம் கூறியதாகவும் அதிகாரி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு தற்செயலான தாக்குதல் அல்ல, மோதலின் விளைவால் ஏற்பட்ட ஒரு சம்பவமாக இருக்கவேண்டும் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்திய அவர், இது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், புளுமிங்டன் மேயர் கெர்ரி தொம்சன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில்,

"இனி வரும் காலத்தில் புளுமிங்டனில் பொதுக் கூட்டங்களில் பொதுமக்கள் துப்பாக்கிகளைக் கொண்டுவருவதற்குத் தடை விதிக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இண்டியானா மாநிலத்தின் துப்பாக்கிச் சட்டங்கள் அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தடுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தால், யார் வேண்டுமானாலும் பகிரங்கமாகத் துப்பாக்கிகளை ஏந்திச் செல்ல முடியும்" என்றார்.

“பொதுக் கூட்டங்களுக்கு துப்பாக்கிகளைக் கொண்டுவரவேண்டாம் என்று மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எமது துப்பாக்கிச் சட்டங்களை மாற்றக்கூடிய அதிகாரம் கொண்ட தரப்பினரிடம் இது குறித்து கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.