Paristamil Navigation Paristamil advert login

ஈரான் வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா பயணம்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா பயணம்

27 சித்திரை 2026 திங்கள் 10:47 | பார்வைகள் : 193


கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்க - ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளது.

ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் எங்களைத் தொலைபேசியில் அழைக்கலாம்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பொக்ஸ்  நியூஸ்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப்,

ஈரானிடம் பேசுவதற்கு எங்களிடம் பாதுகாப்பான தொலைபேசி இணைப்புகள் உள்ளன. ஒப்பந்தத்தில் என்ன இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அது மிகவும் எளிமையானது: ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது.

அது இல்லையெனில் அவர்களைச் சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், ஈரானின் கோரிக்கைகள் போதுமானதாக இல்லை எனக் கூறி, பாகிஸ்தானுக்குச் செல்லவிருந்த தனது தூதுக்குழுவின் பயணத்தை ட்ரம்ப் இரத்து செய்திருந்தார்.

அமெரிக்காவின் பிடிவாதத்தைத் தொடர்ந்து, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று திங்கட்கிழமை ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்து ஆதரவு கோரவுள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஈரானின் நலன்களைப் பாதுகாக்கவும் இந்தச் சந்திப்பு அமையும்" என ரஷ்யாவிற்கான ஈரான் தூதர் காசிம் ஜலாலி தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலோ அல்லது கடல் வழித் தடைகளுக்கு பயந்தோ ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராது" என ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதால், மசகு  எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது உலகளாவிய பணவீக்கத்திற்கும், பொருளாதார மந்தநிலைக்கும் வழிவகுத்துள்ளது. அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தள்ளிவைத்துவிட்டு, இந்த நீரிணையைத் திறப்பது தொடர்பில் ஈரான் புதிய முன்மொழிவை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியிலும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று 14 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் ஜனாதிபதியின் செல்வாக்கு சரிந்து வருவதால், இந்தப் போரை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ட்ரம்ப்புக்கு ஏற்பட்டுள்ளது.

ஈரான் தனது அணுசக்தி கனவைக் கைவிடுமா அல்லது ரஷ்யாவின் உதவியுடன் போரைத் தொடருமா என்பது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.