Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதி!!

பிரான்சில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதி!!

26 சித்திரை 2026 ஞாயிறு 07:45 | பார்வைகள் : 490


மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் இருந்தாலும், பிரான்சில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை தற்போது இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கிரேக்கத்தின் ஏதென்ஸ்  நகரில் சனிக்கிழமை (ஏப்ரல் 25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு முந்தைய நாளில், ஹோர்முஸ் நீரிணை பகுதி இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் முடக்கப்பட்டால், பிரான்ஸ் “எரிசக்தி பற்றாக்குறை காலத்தில்” நுழையக்கூடும் என TotalEnergies நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்திருந்தார். எனினும், அந்த நிலைமை தற்போது அதிகம் சாத்தியமில்லாதது என்றும் மக்ரோன் குறிப்பிட்டார்.

“இவ்வாறான பதற்றமான காலங்களில், அச்சம் மற்றும் பதட்டம் நிலையை மேலும் மோசமாக்கும்,” என ஜனாதிபதி கூறினார். தற்போதைய சூழ்நிலை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அவர் மீண்டும் உறுதி அளித்தார். 

ஆனால், விலை உயர்வின் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய மத்திய கிழக்கு மோதலின் காரணமாக, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கிய வழியாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், யூரோ மண்டலத்தில் அது மார்ச் மாதத்தில் 2.6% ஆக உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் ஏற்றமே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.