Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சரிபார்ப்பு தொடங்கும்! வருமான வரித்துறை

தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சரிபார்ப்பு தொடங்கும்! வருமான வரித்துறை

25 சித்திரை 2026 சனி 11:08 | பார்வைகள் : 209


தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்பாளர்களின் சொத்து விபரங்களை சரிபார்க்கும் நடைமுறை துவக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில், துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் உள்ள சொத்து விபரங்களுக்கும், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, அவர் தாக்கல் செய்த சொத்து விபரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி, ஆர்.குமாரவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், வருமான வரித் துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனு:

லோக்சபா, சட்டசபை தேர்தல்களின்போது, வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விபரங்கள் குறித்து சரிபார்க்க, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, நேரடி வரிகள் வாரியம், 2019ம் ஆண்டு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விபரங்களை, வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை துவங்க வேண்டும்; 150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் என, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் சொத்து விபரங்களை பொறுத்தவரை, விரிவான ஆய்வு செய்யாமல், 2021, 2026ம் ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்புகளை ஒப்பீட்டு பார்க்க முடியாது. உதயநிதியின் நிதி குறித்த ஆவணங்கள், தற்போது வருமான வரித் துறை வசம் இல்லை.

தற்போதைய நிலையில், எந்த இறுதியான முடிவுக்கும் வர முடியாது. எனவே, ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணை, ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.