Paristamil Navigation Paristamil advert login

ஓட்டுப்பதிவு அதிகரிப்பு யாருக்கு சாதகம்? தீவிர ஆலோசனையில் தி.மு.க., - அ.தி.மு.க.,

ஓட்டுப்பதிவு அதிகரிப்பு யாருக்கு சாதகம்? தீவிர ஆலோசனையில் தி.மு.க., - அ.தி.மு.க.,

25 சித்திரை 2026 சனி 08:52 | பார்வைகள் : 214


கடந்த சட்டசபை தேர்தலை விட, 5 சதவீதம் அதிகமாக ஓட்டுப்பதிவு நடந்திருப்பது, யாருக்கு சாதகமாக இருக்கும்' என, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. 5.73 கோடி மொத்த வாக்காளர்களில், 85 சதவீதம் அதாவது 4.82 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர்.

கடந்த 2021ல் ஓட்டளித்த 4.62 கோடி பேருடன் ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் 20 லட்சம் பேர், அதாவது 5 சதவீதம் பேர் அதிகமாக ஓட்டளித்துள்ளனர். 5 சதவீத அதிக ஓட்டுப்பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது தொடர்பாக, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவீத ஓட்டுப்பதிவு நடந்திருப்பது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்களுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

அப்போது, கடந்த 2021 கொரோனா ஊரடங்கு காலத்தில் தேர்தல் நடந்தபோதும், 4.62 கோடி பேர் ஓட்டளித்தனர். ஆனால், கடந்த தேர்தலை விட, 5 சதவீத வாக்காளர்கள் மட்டுமே அதிகமாக இம்முறை ஓட்டளித்துள்ளனர்.

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளாலும், விஜயின் த.வெ.க., களத்தில் இருப்பதாலும், ஓட்டு போட்டவர் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஆனால், விஜய்க்கு பெரிய அளவில் ஆதரவு இருந்திருந்தால், மேற்கு வங்கத்தைப் போல 92 சதவீதம் ஓட்டுப்பதிவு வந்திருக்கும்.

ஆட்சிக்கு எதிரான ஓட்டுகளை, விஜய் தன் பக்கம் இழுத்துள்ளார். இதனால், 150க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்களுடன், ஓட்டுப்பதிவு அதிகரித்திருப்பது குறித்து ஆலோசித்துள்ளார்.

அப்போது, 'கடந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த பட்டியலினத்தவர், கிறிஸ்துவர்கள், இளைஞர்கள் ஓட்டுகள்தான் த.வெ.க.,வுக்கு சென்றுள்ளன. தி.மு.க.,வுக்கு செல்வாக்குள்ள நகரப் பகுதிகளில்தான் விஜய்க்கு அதிக ஆதரவு உள்ளது.

நகரங்களில் இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் பிரியும்போது, அ.தி.மு.க., கூட்டணி வெல்லும் வாய்ப்புள்ளது' என, கூட்டணி கட்சித் தலைவர்கள், பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் அளித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என, இரு கட்சியினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.