Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி

இலங்கையில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி

24 சித்திரை 2026 வெள்ளி 15:32 | பார்வைகள் : 259


ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 52 26 126 என்ற துரித அழைப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு தரப்பினர் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

+94 11 52 26 126, +011 52 26 126 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 077 11 67 739, 074 27 56 098 ஆகிய கையடக்க தொலைபேசி இலக்கங்கள் ஊடாக திணைக்களத்தின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அரச இலச்சினையைப் பயன்படுத்தி கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை உருவாக்கி, டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது 'ஈ-தேசிய அடையாள அட்டைக்காக' தகவல்களைப் பதிவு செய்வதாகக் கூறி, திணைக்களத்தின் பெயரை இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான எந்தவொரு பதிவுகளையும் தாம் மேற்கொள்ளவில்லை என்று ஆட்பதிவுத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, இவ்வாறான கையடக்க தொலைபேசி அழைப்புகளுக்குத் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், துரித அழைப்பு இலக்கத்தை ஒத்த இலக்கங்களில் இருந்து அழைப்புகளை ஏற்படுத்தி, https://drpgov-lk.com என்ற போலியான இணையதளத்தைப் பயன்படுத்தித் தகவல்களைக் கோரினால், அத்தகைய தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது ஈ-தேசிய அடையாள அட்டைக்காக ஆள் பதிவுத் திணைக்களம் இதுவரை எவ்வித பதிவுகளையும் ஆரம்பிக்கவில்லை என அறிவிக்கப்படுவதுடன், இவ்வாறான மோசடியாளர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.